முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை என்று கர்நாடக பாஜக செயலாளர் எம்பி ஷோபா கரந்தலஜே குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் பணி செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் தடுக்கின்றனர். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அனுபமா ஷெனாய், அனூப்ஷெட்டி போன்ற அதிகாரிகள் தாக்கப்பட்டனர். டி.கே.ரவி, அனுராக்திவாரி உள்ளிட்ட அதிகாரிகள் மர்மமான முறையில் இறக்க நேரிட்டது.
மைசூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஷிகா காங்கிரஸ் கட்சியினரால் அவமதிக்கப்பட்டார். நேர்மையான அதிகாரிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். அதனை செய்ய காங்கிரஸ் அரசு தவறியுள்ளது. நேர்மையான அதிகாரிகள் விஜயகுமார், மாதையா போன்றவர்கள் அரசால்
பழிவாங்கப்பட்டனர்.
தொழிலதிபர் மகன் மீது தாக்குதல் நடத்திய முகமது நலபாட்டிற்கு அவரது தந்தையும், எம்.எல்.ஏ.வுமான ஹாரீஸ் ஆதரவு வழங்கினார். அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசு, சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள போலீஸார் மீது நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் தொந்தரவு இல்லாமல் பணி செய்ய முடியாது என்றார்.