பாஜகவிலிருந்து விலகும் எண்ணமில்லை என்று விஆர்எல் குழுமத்தின் தலைவர் விஜய்சங்கேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், நான் பாஜகவிலிருந்து விலக உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ், பாஜக உறுப்பினராக உள்ள எனக்கு பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 3 முறை வாய்ப்பளித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உறுதி அளித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரும் எனக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியின் மேலிடத்தின் உத்தரவின் பேரில் ராஜீவ் சந்திரசேகருக்கு மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நான் பாஜகவிலிருந்து விலக உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். எடியூரப்பா மீண்டும் மாநிலத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஆவல் உள்ள எனக்கு, கட்சியிலிருந்து விலகும் எண்ணமில்லை.
கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். பாஜகவில் சிறைக்கு சென்றுவந்தவர்கள் அதிக உள்ளதாக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் சிறைக்கு சென்று வந்தவர்தான் என்பதை அவர் மறக்ககூடாது. எடியூரப்பா சிறைக்குச் சென்றிருந்தாலும், அவர் சிறந்த அரசியல்வாதி. மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபவர் என்பதை மறக்கக்கூடாது என்றார்.