வளர்ச்சிப் பணிக்கான உத்தரவு வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சி மாமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேயர் சம்பத்ராஜ் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் கட்சித் தலைவர் சிவராஜ் பேசுகையில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குள்ளாக அனைத்து வார்டுகளிலும் ஒதுக்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை தொடங்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். ஆனால், தேர்தலைக் காரணம்காட்டி அதிகாரிகள் வேண்டுமென்றே காலத்தைகடத்தி வருகின்றனர்
என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் சம்பத்ராஜ், பெங்களூரில் அனைத்து வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளைத் தொடங்குவதற்கான பணி ஆணையை அதிகாரிகள் இன்னும் 2 நாள்களுக்குள் வழங்க வேண்டும். மறுக்கும்பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பணியிடை நீக்கம் செய்யவும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.