கர்நாடக அமைச்சரவையின் விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கதக் நகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதுவும் கூறமுடியாது. இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும்.
அரசியலில் சில நேரத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டியுள்ளது. அதன்படியே, ம.ஜ.த,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகிறது. அதற்காக மதவாதிகளிடம் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அண்மையில் நடைபெற்றுமுடிந்த இடைத்தேர்தலில் மதவாத பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனர்.
ஈஸ்வரப்பாவுக்கு பதில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் தலைவர் என்று சொந்தமாக அறிவித்துக் கொண்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். என்றைக்காவது அப்படி அழைத்துக் கொண்டதுண்டா? அப்படிப்பட்ட தலைவர் என்று எந்த பல்கலைக்கழகமாவது எனக்கு பட்டம் அளித்துள்ளதா? கே.எஸ்.ஈஸ்வரப்பா, பேச தெரியாத அரசியல்வாதி. எனவே, அவர்கூறும் கருத்துக்குப் பதிலளிக்க விரும்பவில்லை.
ஜனார்த்தன ரெட்டி கைது ஏன்?
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கும் பாஜகவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படியானால், ஜனார்த்தன ரெட்டியை மோசடி வழக்கில் சிக்கவைத்து பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாக பாஜகவினர் கூறுவதில் அர்த்தமில்லையே. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதன்படி, ஜனார்த்தன ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் சித்தராமையா.