ரெளடிகள் 2 பேரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
பெங்களூரு கே.ஆர்.புரம் தனிசந்திராவைச் சேர்ந்த நவீன்குமார், கிரி ஆகியோர் ரெளடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருவரும் கே.ஆர்.புரம் முன்னாள் கவுன்சிலரின் கணவர் கொலை வழக்கில் சிக்கியுள்ளனர். சேதன் என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கிலும் நவீன்குமாரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜீப்பில் சென்ற கே.ஆர்.புரம் காவல் ஆய்வாளர் ஜெயராஜ் தலைமையிலான போலீஸார், காஜிசொன்னேஹள்ளி அருகே மோட்டார் சைக்கிளை மறித்து இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது நவீன்குமார் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் போலீஸார் நோக்கி சுட்டுள்ளார். இதனையடுத்து, ஆய்வாளர் ஜெயராஜ், தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டத்தில் நவீன்குமாரின் வலது காலில் குண்டு பாய்ந்தது. உடனே கிரி, தன்னிடமிருந்த சூரி கத்தியால், காவலர் முனிராஜை குத்திவிட்டு தப்பமுயன்றுள்ளார். அவரையும் ஜெயராஜ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர், இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இருவரையும், காவலர் முனிராஜையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கே.ஆர். புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.