முன்னாள் பிரதமரும், ம.ஜ.த. தேசியத் தலைவருமான எச்.டி.தேவெகெளடா, 4 நாள்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தேவெ கெளடா, அவரது மனைவி சென்னம்மா, வெளிநாடுவாழ் இந்தியர் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ஆருதி கிருஷ்ணா, மஜத தேசியப் பொதுச்செயலர் குன்வர் டேனிஷ் அலி ஆகியோர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபை சென்று சேர்ந்த தேவே கௌடா, அங்கு இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இதையடுத்து, திங்கள்கிழமை துபை நகரை சுற்றிபார்க்கும் தேவெகெளடா, இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து பஹ்ரைன் சென்றடைகிறார்.
இதையடுத்து, நவம்பர் 13-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு பஹ்ரைன் நாட்டின்கன்னட சங்கத்தினரால் அமைக்கப்படவுள்ள கன்னட மாளிகைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து துபை திரும்பும் எச்.டி.தேவெகெளடா, அபுதாபிக்கு சென்று அங்கு சுற்றுபார்க்கிறார். அன்றிரவு துபை திரும்பும் அவர், நவம்பர் 15-ஆம் தேதி காலை 3.40 மணிக்கு துபையில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 8.50 மணிக்கு பெங்களூரு வந்து சேர்கிறார்.