மாணவர்கள் இலக்கை நோக்கிப் பயணித்தால் மட்டுமே சாதிக்க முடியும் என தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின்(என்ஏஏசி) இயக்குநர் எஸ்.சி.சர்மா தெரிவித்தார்.
பெங்களூரு ராமையா பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப் படிப்பு தொடக்க விழாவில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு அவர் பேசியது:
மாணவர்கள் கனவுகளோடும், எதிர்ப்பார்ப்போடும் கல்வி பயில வந்துள்ளீர்கள். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூறியது போல உங்கள் கனவை நினைவாக்க இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். இலக்கு இல்லாத பயணத்தால் நன்மை பயக்காது.
வேலை வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு படிப்பதை தவிர்க்க வேண்டும். சிறந்த வாழ்க்கை வாழுவதற்கான கல்வியை கற்றுக் கொள்வது அவசியம். போட்டி நிறைந்த உலகத்தில் பாடத்திட்ட கல்வியை பயிலுவது அவசியம். அதே நேரத்தில் மக்களோடு இணைந்து வாழ அனுபவக் கல்வி மிகவும் அவசியம். எனது சிறுவயதில் வெளிநாடுகளுக்கு கல்வி சென்று பயிலுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம். ஆனால் உலக மயமாக்கலுக்கு பிற்கு வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலுவது எளிதாக உள்ளது.
கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு இணையான கல்வியை தற்போது இந்தியாவிலும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ராமையா பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நாட்டிற்கும், தங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி இன்றைய மாணவர்களின் கைகளில் உள்ளது. அனைத்து துறைகளிலும் சாதனை புரிய, சிறப்பாக மாணவர்கள் கல்வியை பயிலுவது அவசியம் என்றார் அவர். நிகழ்ச்சியில் ராமையா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெயராம், தாற்காலிக துணை வேந்தர் கோவிந்த கடம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.