இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளியைச் சேர்ந்தவர் நதீம்பாஷா (22). தொலைக்காட்சி பழுதுபார்ப்பவரான இவர், திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, கே.ஜி.ஹள்ளி எச்.பி.ஆர். லேஅவுட் நரேந்திரா டென்ட் சாலையில் வேகமாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நதீம்பாஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், சோமசுந்தராபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (35). வாடகை கார் ஓட்டுநரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சென்ரல் ரயில்வே சாலையில் சென்ற போது, எதிரே வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சண்முகம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.