கர்நாடக சிற்பக்கலை அகாதெமி நடத்தும் கலைப்பயணத்தில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் 2018-19-ஆம் ஆண்டுக்கான சிற்பக்கலைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தொழில்முறை சிற்பிகள், பி.எஃப்.ஏ., எம்.எஃப்.ஏ. பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில்முறை சிற்பிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 21 முதல் 45 வயதுக்குள்பட்டோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 10 பேர் தேர்வு செய்யப்பட்டு பேளூர், ஹளேபீடு, பாதாமி, ஹம்பி, பட்டதகல்லு, சிராவணபெலகோலா, அம்ருதேஸ்வரா, அரசிகெரேயின் சிவன்கோயில், லக்குண்டி,சோமநாத்புரா, தலக்காடு, பத்ராவதியின் லட்சுமி நரசிம்மா கோயில், பள்ளிகாவியின் கேதரேஸ்வரா கோயில் ஆகிய இடங்களுக்கோ அல்லது அகாதெமி தெரிவிக்கும் இடங்களுக்கோ சென்று நிழற்படங்களை வழங்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும். இதில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை நிறைவு செய்து பதிவாளர், கர்நாடக சிற்பக்கலை அகாதெமி, பெங்களூரு என்ற முகவரியில் நேரிலோ அல்லது www.karnatakashilpakalaacademy.org என்ற இணையதளத்திலோ அக்.4-க்குள் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.