இளைஞர்களின் எழுச்சியால் நாடு விரைவில் பயனடையும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், பெலகாவி கே.எல்.எஸ். சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வைர விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது: அண்மைக் காலமாக நாட்டில் இளைஞர்களின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளது. அவர்களின் எழுச்சியால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பயன் இன்னும் கிடைக்கவில்லை. என்றாலும், விரைவில் அவர்களின் எழுச்சியின் பலனாக நாடு பயனடையும் என்பதில் சந்தேகமில்லை.
கர்நாடகம் மாநிலம், பெலகாவிக்கு நான் வருவது இது முதன்முறை என்றாலும், இந்த நகரம் கல்வி, மருத்துவத்தில் சிறந்த பெயரைப் பெற்றுள்ளதை நானறிவேன். இந்த நகருக்கு 1892-இல் சுவாமி விவேகானந்தர் வருகை புரிந்தார். அவரின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் இன்றளவிலும் நமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பாக பூஜை செய்து கொண்டாடுவதை லோக்மானிய பால கங்காதர திலகர் தொடக்கி வைத்தார். அதனை நாம் இன்றளவும் பின்பற்றி வருகிறோம். பெலகாவியின் பெயருக்கு மகுடம் சூட்டுவது போல கே.எல்.எஸ். சட்டக் கல்லூரி அமையப் பெற்றுள்ளது. அந்த கல்லூரியின் வைர விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
வழக்குரைஞர்கள் தங்கள் பணியைத் தொழிலாக மட்டும் பார்க்காமல், உணர்வுப் பூர்வமாக அணுக வேண்டும். மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரும் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி, நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். அவர்களின் வழிகாட்டுதலை வழக்குரைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குரைஞராகப் பணியாற்றி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்வு பெற்றுள்ளதை யாரும் மறந்துவிட முடியாது. அவரின் வழிகாட்டுதலை இளம் வழக்குரைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.