கஞ்சா, சிரஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த வெளிநாட்டினர் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுக்வொநான்சொ அஜ்மமெக்வே (42), டான் தாமஸ் (24). அஜ்மமெக்வே பெங்களூரு எலஹங்கா புது நகரிலும், தாமஸ் மாருதி சேவா நகர் வெங்கடரமணா லேஅவுட்டிலும் வசித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் கொத்தனூரு காவல் சரகத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதைப் பொருள்கள் கஞ்சா, சிரஸ், எம்.டி.எம்.ஏ. உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸார், போதைப் பொருள்களை விற்பனை செய்த சுக்வொநான்சொ அஜ்மமெக்வே, டான் தாமஸ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, 25 கிராம் சிரஸ், எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், எல்.எஸ்.டி. பேப்பர்கள், வீட் ஆயில் டின், 3 செல்லிடப்பேசிகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல், உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் லுத்யா பேட்ரிக் (36) பெங்களூரு பாபுசா பாளையத்திலும், சூடான் நாட்டைச் சேர்ந்தவர் சபாசியோ பெளல் கில்லோ (22) கல்யாண் நகர் சென்னப்பா லேஅவுட்டிலும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கொத்தனூரு காவல் சரகத்தில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு போதைப் பொருள்கள் கோகைன், மெத்தாம்பேடாமைன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனராம்.
தகவலறிந்த போலீஸார், அங்கு சென்று 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 27 கிராம் மெத்தாம்பேடாமைன், 6 கிராம் கோகைன், 3 செல்லிடப்பேசிகள், மோட்டார் சைக்கிள், ரூ.6,500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்விரு வழக்குகள் குறித்தும் கொத்தனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து
வருகின்றனர்.