நிலத்துக்கான ஆவணங்களை வழங்க லஞ்சம் பெற்ற நில ஆவணப் பிரிவு இணை இயக்குநரை லஞ்ச ஒழிப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், சுகட்டூர் ஒன்றியம், அன்கதட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கு சொந்தமான நில ஆவணங்களை வழங்க கோலார் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில ஆவணப் பிரிவுக்கு மனு அளித்தாராம். ஆவணங்களை வழங்க நில ஆவணப் பிரிவு இணை இயக்குநர் எச்.நாகேஷ் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை ரூ.5 ஆயிரத்தை நில ஆவணப் பிரிவு இணை இயக்குநர் எச்.நாகேஷிடம் அவர் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகேஷிடம் கோலார் லஞ்ச ஒழிப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.