விநாயகர் ஊர்வலத்தையொட்டி, சம்பேகஹள்ளி, அம்ருத்தள்ளி, கொத்தனூர் ஆகிய 3 காவல் சரகங்களில் திங்கள்கிழமை (செப். 17) மது விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு சம்பேகஹள்ளி, அம்ருத்தள்ளி, கொத்தனூர் ஆகிய காவல் சரகங்களில் கூட்டு விநாயகர் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, சம்பேகஹள்ளி, அம்ருத்தள்ளி, கொத்தனூர் காவல் சரகங்களில் காலை 6 மணி முதல் இரவு 11.30 வரை மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டு விநாயகர் ஊர்வலம் தனிசந்திரா, சாராயிபாளையா, நாகவரா வழியாக வந்து அல்சூர் ஏரியில் விசர்ஜனம் செய்வதால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளி இறந்த சோகம்:
மனைவி, தாய் தற்கொலை
பெங்களூரு, செப். 16: தையல் தொழிலாளி இறந்த சோகத்தில், அவரது மனைவியும், தாயும் தற்கொலை செய்து கொண்டனர்.
பெங்களூரு யஸ்வந்தபுரம் முத்தியால நகர் 18-வது குறுக்குச் சாலையைச் சேர்ந்த தையல் தொழிலாளி சேஷபாணி (44). இவரது மனைவி உஷாநந்தினி (42). சேஷபாணியின் தாய் லட்சுமிதேவி (65). இந்த நிலையில், சேஷபாணி 4 நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் வீட்டில் மரணம் அடைந்துள்ளார். இந்தத் தகவலை யாருக்கும் தெரிவிக்காமல், உஷாநந்தினியும், லட்சுமிதேவியும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பின்னர், இருவரும் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 3 நாள்களாக சேஷபாணி வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில், துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து, 3 பேரின் சடலங்களையும் மீட்டு பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.