சமூக நீதி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பி.டி.பரமேஸ்வர்நாயக் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடக மாநிலம், பல்லாரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 6 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். அதில் ஒருவரைக் கூட அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் சமூக நீதி அடிப்படையில் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் 6 பேரை வெற்றிபெறச் செய்த எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட அமைச்சராக வாய்ப்பு வழங்காதது, எங்கள் மாவட்ட மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கட்சியின் மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்றார் அவர்.