பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் கற்கள் மூலம் பழுக்க வைத்த பழங்கள், காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழம், காய்கறிகள் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனைச் சங்க பிரதிநிதிகளுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செழியன் பேசியதாவது: இயற்கையாக விளையும் பழங்கள், காய்கறிகளையே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும், உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன கற்களால் கட்டாயமாக பழுக்க வைத்த பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற வியாபார சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள் ஆகியோர், பாதுகாப்பான காய்கறிகள், பழங்களையே பொதுமக்களுக்கு வழங்குவோம் என ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.