"தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் அம்பத்தூர் ஏரியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் 35 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அம்பத்தூர் ஏரியில் சனிக்கிழமை சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏரியின் கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைக் கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு அப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. இந்தப் பணியில் 150 துப்புரவு மற்றும் மலேரியா தடுப்பு பணியாளர்களும், 50 தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இந்த தூய்மைப்படுத்தும் பணியில் 35 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
ஏரியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணியும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், செயற்பொறியாளர், மண்டல சுகாதார அலுவலர், உதவி செயற்பொறியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.