விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்த் திரைப்படப் பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இது குறித்து ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சனிக்கிழமை அனுப்பியுள்ள செய்தி:
கடும் வறட்சியால் நாடு முழுக்க 25 ஆயிரம் விவசாய பெரு மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அனைத்து துறைகளும் விஞ்ஞான வயப்பட்டு முன்னேற்றம் கண்டு வரும் நேரத்தில், விவசாயத் துறையில் மட்டும் எந்த விஞ்ஞான யுக்தியையும் புகுத்தாமல் பழைய சாகுபடி முறைகளேயே புகுத்தப்பட்டு வருகின்றன. இதுதான் இந்த நிலைக்குக் காரணம் என அறிகிறோம்.
விவசாயிகளின் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் வரும் 25-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஃபெப்ஸி தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.
அன்றைய தினம் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட எந்த திரைப்படப் பணிகளும் நடைபெறாது. திரைப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.