சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை பல இடங்களில் கனமழை பெய்தது. 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்ட மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதன் காரணமாக, முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை நீர் சாலைகளில் குளம் போல் தேங்கியது.
சென்னையில் கிண்டி, கத்திப்பாரா, சைதாப்பேட்டை, தியாகராயநகர், அண்ணாசாலை , அண்ணா மேம்பாலம் , ஸ்டெர்லிங்சாலை, அடையாறு சர்தார் படேல் சாலை, பாரிமுனை ,கோயம்பேடு, பூந்தமல்லி உள்படப் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தொடர் விடுமுறை என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாமல், நீண்ட நேரம் காத்திருந்தன. இதே போன்று சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.