சென்னை திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தில் கஞ்சா விற்கப்படுவதாக மெரீனா போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸார் சிவராஜபுரம் தேவி கருமாரியம்மன் கோயில் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற பெண்ணிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் கோகிலா என்று தெரிய வந்தது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.
இதையடுத்து போலீஸார், அவரை சோதனையிட்டதில் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, கோகிலாவை கைது செய்தனர்.மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.