சென்னை சேத்துப்பட்டில் இளைஞர் மதுப்பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பட்டு என்ற பார்த்திபன் (25) மீது கொலை வழக்கு,கொலை மிரட்டல் வழக்கு, அடிதடி வழக்கு என 7 வழக்குகள் இருந்தன.
இந்த நிலையில், பார்த்திபன், தனது வீட்டின் அருகே கூவத்தையொட்டியுள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பதை சனிக்கிழமை காலை அந்தப் பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள், சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பார்த்திபன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பார்த்திபனை கொலை செய்தவர்கள் யார், அவரை எதற்காக கொலை செய்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.