அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது மழை பெய்துவருவதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீரை சுத்தம் செய்யாமல் அப்படியே நேரடியாக விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் அம்பத்தூர் மண்டலம் முழுவதும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்புப் பணியை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காய்ச்சல் பாதிப்பினால், இப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரசின் கடமை. ஆனால், அரசு அதனைச் செய்யவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் வழங்கும் நீரை குளிப்பதற்கும், துணிதுவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது. குடிக்க விலைகொடுத்து, தண்ணீர் வாங்கும் நிலை தான் உள்ளது. இதனால், நடுத்தர, ஏழை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்' என்றார்.
எனவே, சுகாதாரமான, தரமான குடிநீர் வழங்கி, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.