சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (27). இவர் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது தனது நண்பர் புதுக்கோட்டையைச் சேர்ந்த அவினாஷ் (27), உறவினர்கள் விஷாலி (21), கண்மணி (24) ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் வந்துக் கொண்டிருந்தார். காரை தாமோதரன் ஓட்டினார்.
கார், சென்னை அருகே பனையூர் அருகே வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். சிறிது நேரத்தில் தாமோதரன் இறந்தார். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள், காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இறந்த தாமோதரனுக்கு திருமணமாகி 4 மாதங்கள்கள் தான் ஆகிறது. இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.