சென்னை மயிலாப்பூரில் ஆளில்லாத வீட்டில் 22 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூர் சாலைத் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ரா.சீதாலட்சுமி (72). இவரது கணவர் ராமகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சீதாலட்சுமி அங்கு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தியாகராய நகரில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு சென்றார். வியாழக்கிழமை காலை அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள், சீதாலட்சுமி வீட்டு வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சீதாலட்சுமியின் புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.