சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், தனது தலைநகராக ஜெருசலேமைக் கூறி வருகிறது. அதற்கு சர்வதேச நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஒருசில அமைப்புகளும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதனால் அந்த அமைப்புகள், சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்தது.
அதையடுத்து அமெரிக்க துணை தூதரகத்தை சுற்றிலும் வழக்கமாக உள்ள காவல்துறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள். இப்பாதுகாப்பு பணிகள் நிலைமை சீராகும் வரை தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.