எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (85) (பாக்கியம் ராமசாமி) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (டிச.7) இரவு காலமானார்.
ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் எனும் ஜ.ரா.சுந்தரேசன் 1932-ஆம் ஆண்டு பிறந்தார். பிரபல தமிழ் எழுத்தாளரான இவர், தனது தாய், தந்தை பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி எனும் புனைப் பெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றவராக விளங்கியவர். தனிப்பட்ட எழுத்தாளராக அறியப்பட்டதற்கும் மேலாக, குமுதம் வார இதழில் நீண்ட காலம் பணியாற்றினார்.
அப்புசாமி-சீதாப்பாட்டி: இவரது எழுத்தில் உருவான அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி எனும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963-ஆம் ஆண்டில் இந்த இரு கதா பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையை குமுதத்தில் எழுதினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.
இவரின் "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்', "மாணவர் தலைவர் அப்புசாமி', "அப்புசாமியும் 1001 இரவுகளும்' ஆகிய புதினங்கள் பிரபலமானவை.
"அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' என்ற அமைப்பையும், "அக்கறை' என்ற அமைப்பையும் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
சிறந்த இசைக் கலைஞர்களைக் கொண்டு "அப்புசாமி - சீதாப்பாட்டி இசைக் கூடல்' என்ற அமைப்பை அண்மையில் ஏற்படுத்தினார்.
அவருக்கு மனைவி விஜயலட்சுமி, மூன்று மகன்கள் உள்ளனர்.