சென்னை, பெரவள்ளூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து, அவர் அணிந்திருந்த காதணியைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரவள்ளூர் ஜவஹர் நகர் லோயர் ஸ்கீம் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கஸ்தூரி (56). இவர் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு மர்ம நபர் வீட்டின் அழைப்பு மணியை ( காலிங் பெல்) ஒலிக்கச் செய்துள்ளார். இதையடுத்து கஸ்தூரி வீட்டுக் கதவை திறந்தபோது, வாசலில் தயாராக நின்ற முகமூடி அணிந்த நபர், கஸ்தூரியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். அதைத்தொடர்ந்து அவர் அணிந்திருந்த காதணியையும் கழற்றித் தர கூறியுள்ளார். அதை கழற்றுவதற்கு அப்பெண் சிரமப்பட்டபோது, நகையை காதுடன் அறுத்துக் கொண்டு அந்த நபர் தப்பி தலைமறைவானார். இதனால் பலத்த காயமடைந்த கஸ்தூரி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிந்து, இதுதொடர்பாக சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.