தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இதுவரை 56 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக,வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாகக் குழுத் தலைவரும் அரசு தலைமை வழக்குரைஞருமான விஜய் நாராயண் கூறியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு வழக்குரைஞர் சங்கத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் இதுவரை 56 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகக் கூறினார். சங்கத்தில் நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தமிழகம் முழுவதும் உள்ள 86 ஆயிரம் வழக்குரைஞர்களில் இதுவரை 56 ஆயிரம் பேர் சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள். மேலும் கல்விச் சான்றிதழ் தொடர்பான விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 742 வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டுக்கு முன்பு வழக்குரைஞர்களாகப் பதிவு செய்து அகில இந்திய வழக்குரைஞர் சங்கத்தின் சேமநல நிதி செலுத்தாத 9 ஆயிரத்து 249 வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேமநல நிதியை செலுத்தினால் இவர்கள் மீதான நடவடிக்கை முடித்துக்கொள்ளப்படும். தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும்.