வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது.
டிசம்பர் 12-இல் வீசிய வர்தா புயலால் பூங்காவிலுள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. இதனால் விலங்குகளின் அடைப்பிடங்கள், பார்வையாளர்களுக்கான வசதிகள் போன்றவை கடுமையாக சேதம் அடைந்தன.
துரித மீட்புப் பணிகளால் விலங்குகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வழங்கல் உடனடியாக இயல்புநிலைக்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் சரி செய்யப்பட்டு, விலங்குகளை பார்வையாளர்கள் பார்வையிடக் கூடிய நிலை மீட்கப்பட்டுள்ளது.
இதனால், பிப்ரவரி 10 (வெள்ளிக்கிழமை) முதல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.