"சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்'
ஆண்டுதோறும் அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று இந்திய சர்க்கரைநோய் ஆய்வு மையத் தலைவர் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
சர்வதேச அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது சீனாவில் 11.4 கோடியாகவும், இந்தியாவில் 6.5 கோடியாகவும்,அமெரிக்காவில் 3 கோடியாகவும் உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 10 சதவீதமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த 30 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டனர். தற்போது 30 வயதில் சர்க்கரைநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கு உணவு பழக்கம், வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவை முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 20 வருடங்களுக்கு முன் கிராமப்புறங்களில் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 18 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
தற்போது சர்க்கரை நோய் மருத்துவ சிகிச்சை முறையில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளால் இதர உறுப்புகளின் பாதிப்பைத் தடுக்க முடியாது.
தற்போதுள்ள மருந்துகள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன் கண், இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்து போதிய விழிப்புணர்வை நோயாளிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் பெறுவது அவசியம் என்றார் அவர்.