சென்னையில் இதுவரையில் 7 லட்சம் பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 1 }ஆம் தேதி முதல், குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில், தமிழகம் முழுவதும் 1.19 கோடி பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் மொத்தம் 20.08 லட்சம் குடும்ப அட்டைகள் உபயோகத்தில் இருந்து வருகின்றன. இதில் 83.10 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் உள்ள நிலையில், நியாய விலைக்கடைகளில் 65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இதுவரையில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சம் பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 18.10 லட்சம் பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காமல் உள்ளனர். மேலும், 2 லட்சம் பேர் வரையில் தங்களது செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்யாமல் உள்ளனர்.
தற்போது வரை, ஆதார் எண் பதிவு செய்தவர்களுக்கும், பதிவு செய்யாதவர்களுக்கும் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த விவரங்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள இ }சேவை மையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று அவற்றை பதிவு செய்து கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.