இளைஞரை கத்தியால் குத்தி வழிப்பறி: பெண் உள்பட 4 பேர் கைது
சென்னை மெரீனாவில் இளைஞரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமரகுரு (38). இவர், கடந்த சனிக்கிழமை இரவு மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறம் உள்ள மணல் பரப்பில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் உள்பட 4 பேர் குமரகுருவிடம் பணம் கேட்டு மிரட்டினராம். அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் குமரகுருவை கத்தியால் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த செல்லிடப்பேசி, பணப்பை ஆகியவற்றை பறித்துக் கொண்டுத் தப்பியோடியது.
இதில் காயமடைந்த குமரகுரு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இது குறித்து மெரீனா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தசரதன் (18), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அர்ச்சனா என்ற ரேவதி (28), மந்தைவெளி கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்த கௌதம் (23), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்4 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து,விசாரணை செய்தனர்.