குடிபோதையில் கார் ஓட்டி கடைகள் மீது மோதியது தொடர்பாக இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-
பூந்தமல்லி மலையம்பாக்கம் நேரு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவரது நண்பர் வடபழனியை சேர்ந்த கௌதமன். சுரேஷ் சனிக்கிழமை இரவு கௌதமன் வீட்டுக்குச் சென்றிருந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) அதிகாலை கௌதமன், சுரேஷை பூந்தமல்லியில் உள்ள வீட்டில் கொண்டு விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றார். காரை சுரேஷ் ஓட்டினார். அப்போது ஆற்காடு சாலையில் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி அருகே வந்தபோது கார் திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த கடைகள் மீது இடித்ததோடு, சாலையோரம் இருந்த விளம்பர பலகைகள் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் கௌதமனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ், கௌதமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கார் தாறுமாறாக ஓடிய நேரத்தில் பிளாட்பாரத்தில் யாரும் இல்லாததால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.