சென்னை மெரீனா பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
எழும்பூர் போலீஸார் காந்தி- இரவின் சாலையில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பொது கழிப்பிடம் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது மூன்று நபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சேப்பாக்கத்தைச் சேர்ந்த இக்பால் உசேன் (22), முக்ததீர் அகமது (22), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் (22), ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, மெரீனா அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தனம் (எ) தனலட்சுமி (38) - யை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,700-ஐ பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.