மரபணு மாற்றப்பட்ட கடுகை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான செயற்பாட்டாளர் கவிதா குருகந்தி கூறினார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், சனிக்கிழமை உணவிலும் உழவிலும் மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆபத்துகளை விளக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் கவிதா குருகந்தி கூறியது:
அரசியல் சாசன ரீதியிலான அதிகாரத்தை மாநில அரசுகள் நிலை நிறுத்த வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட கடுகு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்தும் பாரதிய ஜனதா அரசு இதை ஏன் முன்னிறுத்துகிறது எனத் தெரியவில்லை. மாநில அரசுகள் உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி மரபணு மாற்றப்பட்ட கடுகின் வணிக அறிமுகத்தை நிறுத்த வலியுறுத்த வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த முயற்சியை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றார்.
வேளாண்மை கொள் கை நிபுணர் தேவிந்தர் ஷர்மா, மரபணு மாற்றப்பட்ட கடுகு அறிமுகம் ஓர் அறிவியல் ஏமாற்று வேலை. அதிக விளைச்சல் தருவதாக பொய்யாகப் பிரசாரம் செய்யப்படுகிறது.
கடுகை முன்னிறுத்தி மேலும் பல்வேறு வகையான மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் வருகைக்கு இது வழிவகுக்கும். இம்முயற்சியால் விவசாயிகள், நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், சித்த மருத்துவர் கு.சிவராமன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.