மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையிலும் சென்னை காசிமேடு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அதிநவீன மீன் ஏலக்கூடம், விற்பனைக் கிடங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதைத் திறப்பதற்கு மீன் மொத்த வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதி மன்றத்தில் தடைபெற்றுள்ளனர். இதைக் கண்டித்து கடலுக்குச் செல்லப்போவதில்லை என மீனவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை இயக்குநர் தண்டபாணி உள்ளிட்ட அதிகாரிகள், விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள், மொத்த வியாபாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
ஏல மையம் அருகே மொத்த வியாபாரிகளுக்கு ஒரு விற்பனைக் கிடங்கு அமைத்துத்தர வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து புதிய கிடங்கு அமைக்கப்படும் இடம் அடுத்த இருநாள்களில் முடிவு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால் காசிமேட்டைச் சேர்ந்த 1,100 விசைப்படகு மீனவர்களும் சனிக்கிழமை (ஜூன் 17) மீன் பிடிக்கச் செல்ல இருப்பதாக தெரியவந்துள்ளது.