சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதிலும், கத்திரி வெயில் காலத்தில் தினமும் 100 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டனர். கத்திரி வெயில் நிறைவடைந்த பிறகு, தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, சில மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனாலும் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலையில் மழை பெய்யத் தொடங்கியது.
எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், வளசரவாக்கம், கே.கே.நகர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்தனர்.
இம்மழையால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர்ச்சி பரவியது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை தவிர, புறநகரிலும் பரவலாக மழை பெய்தது.
மழை தொடரும்: தெற்கு ஆந்திர கடற்கரை முதல் குமரிக்கடல் வரை பரவியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.