சென்னையில் போதைப் பாக்கு விற்க உடந்தையாக இருந்ததாக 3 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் மாவா உள்ளிட்ட போதைப் பாக்குகள் விற்பதைத் தடுப்பதற்கு காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் தனியார் கிட்டங்கிகளில் போலீஸார் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
எனினும், பாரிமுனை, சௌகார்பேட்டை, வேப்பேரி, முத்தியால்பேட்டை, எம்.கே.பி.நகர், பெரம்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட சில பகுதிகளில் மாவா உள்ளிட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது.
இது குறித்தும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் நபர்கள் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் 3 காவலர்கள் போதை பாக்கு வியாபாரிகளுக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டார்.