சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவர் வீட்டில் திருடியதாக கணவன்-மனைவி இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
ராஜா அண்ணாமலைபுரம் கேசவபெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஆ.சுவேதா (34). கண் மருத்துவரான இவர்,ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சுவேதா வீட்டில் வேலை செய்த பாலகிருஷ்ணா நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த சா.அமுதா (40), அவருடைய கணவர் சாமிநாதன் (49) உதவியோடு திருடியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.