சென்னை மயிலாப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி ரோட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ச.கேசவன் (46). சென்னை உயர்நீதிமன்றதில் வழக்குரைஞராக உள்ளார்.
அவர், ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகனையும், நான்காம் வகுப்பு படிக்கும் தனது மகளையும் அவர்கள் படிக்கும் சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் திங்கள்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
மயிலாப்பூர் கலங்கரை விளக்கம் பறக்கும் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திடம் அருகே வந்தபோது, அவரை மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் வழிமறித்தது. பின்னர்,அந்தக் கும்பல் கேசவனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தகராறு முற்றவே அந்தக் கும்பல், மறைது வைத்திருந்த அரிவாளால் கேசவனை வெட்டிவிட்டு தப்பியோடியது. இதைப் பார்த்த பொதுமக்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கேசவனை மீட்டு, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மெரீனா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடைபெற்ற இச் சம்பவத்தினால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.