மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 13-ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் மருத்துவக் கல்வி கலந்தாய்வு குழுவின் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இணையதளம் வழியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 3-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை கலந்தாய்வுக்காக இணையதளத்தில் பதிவு செய்யலாம். முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறும். அதற்கான முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஜூலை 16 முதல் 22-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.
2-ஆம் கட்டம்: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்படும். 2-ஆம் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் 16-ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பின்பு மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும்.