தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் ஒவ்வோராண்டும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பத்தாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை தங்கு தடையின்றிக் கல்வியைத் தொடர வசதியாக மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
மாநில அளவில் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த ஆண்டு நவ.5-ஆம் தேதி நடைபெற்றது. தற்போது, இத்தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளலாம்.