ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் உரிய அனுமதி சான்றிதழ் இல்லாமல் விளம்பரங்கள் செய்யக்கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில், வாகனங்களில் கொடிகள் கட்டுவதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். அதோடு, பிரசாரம், காணொளி பிரசாரம் மேற்கொள்ள முறைப்படி, மாவட்ட தேர்தல் அலுவரிடம் அனுமதி பெற வேண்டும்.
விளம்பரத்துக்கு..: அதுபோல், காணொளி வாகனங்களில் குறிப்பிடப்படும் பிரசார பொருளடக்கம், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு, பெயர், நாள், விளம்பர பொருளடக்க விவரம், செலவினத்தொகை ஆகிவற்றை தெரிவிக்க வேண்டும். இதற்காக, சென்னை மாநகராட்சியில் செயல்படும் ஊடக சான்றளிக்கும் குழுவிடம் 3 நாள்களுக்கு முன்பு, பிரதான கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் சான்று, அனுமதி பெறுவது அவசியம். அதன்பிறகே, விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
மாணவர்களுக்காக..: பிரசாரம் காலை 6 முதல் இரவு 10 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவோடு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், பிரசாரத்தின் போது பிளாஸ்டிக் பொருள்கள், இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது. எனவே, வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாறாக, விதிமீறலில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.