சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஒடிஸா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அருண்குமார் சத்தோஜி(20), சௌரவ் சர்க்கா(20). நண்பர்களான இருவரும் சென்னை அருகே செம்மஞ்சேரியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதற்காக செம்மஞ்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், இருவரும் சனிக்கிழமை இரவு சோழிங்கநல்லூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்றபோது சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அதே வேகத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் மோதி மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அருண்குமார் சத்தோஜி, சௌரவ் சர்க்கா ஆகிய இருவருக்கும் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.