பெருங்களத்தூர் -மதுரவாயல் புறவழிச் சாலையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள பெருங்களத்தூர் -மதுரவாயல் புறவழிச் சாலையோரத்தில் பெருங்களத்தூர், தாம்பரம், பம்மல், குன்றத்தூர், போரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கோழி, மீன் கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி இரவு நேரங்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.
மாமிச கழிவுகள், குப்பைகள், ரசாயனக் கழிவுகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அப்புறப்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசுகின்றன.
காடாய் கருவேல மரங்கள்: இருபுறமும் சாலையோரச் சரிவுகளில் காடாய் வளர்ந்து கிடக்கும் கருவேலமரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படாத நிலையில், அவை சாலைத் தடுப்பைத் தாண்டி சாலையோரமாக வளர்ந்து நிற்கின்றன. இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வேகமாகச் செல்வதால் சாலையோரமாக ஒதுங்கி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கருவேல மரங்களின் முள் குத்தி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சாலையோரங்களில் புதராக முள்செடிகள் வளர்ந்து கிடப்பதால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மறைந்து இருந்து, இருசக்கர வாகனங்களில் வருபவர்களை மறித்து வழிப்பறியில் ஈடுபட வசதியாக உள்ளது.
மேடு பள்ளம்: சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக சாலை பெயர்ந்து மேடு பள்ளமாய் காட்சியளிக்கிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலை, புறவழிச் சாலையோரங்களில் வளர்ந்து கிடக்கும் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும், சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்பதே புறவழிச் சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.