காப்பகங்களில் உள்ள முதியோருக்கு உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராஜன் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகர் ராஜன் கண் மருத்துவமனையில் டாக்டர் வ.செ.நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லங்களில் முதியோர்களைப் பராமரிக்கும் செவிலியர்கள், காப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராஜன் பேசியதாவது:
முதியோர்களை தனிமைப்படுத்தி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் மனதளவிலும், உடலளவிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், முதியோர்கள் உடல்நலத்தை பாதுகாக்க காலமுறைப்படி மருத்துவ சிகிச்சை அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். காப்பகங்களில் முதியோர்களுக்கு நிமோனியா போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கத்தை தொடக்கி வைத்த சமூக நலத் துறை இயக்குநர் வி.அமுதவல்லி, முதியோர் நலனுக்கான முக்கிய கோரிக்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.
முதியோர் மனநலம், உணவு நடைமுறை, முதுமையில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மருத்துவர்கள் மோகன்ராஜ், ஸ்ரீதர், ஷீலாசேகர், அரிசங்கர் உள்ளிட்டோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் "முதுமையை முறியடிப்போம்' என்ற குறுநூல் மற்றும் முதுமைக்கேற்ற உணவுகள் குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டன.