சென்னை மாநகராட்சி பள்ளிகள் 10 -ஆம் வகுப்பு தேர்வில் 93.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 70 சென்னை உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளைச் சேர்ந்த 3,028 மாணவர்கள், 3,274 மாணவியர்கள் என மொத்தம் 6,302 பேர் தேர்வு எழுதினர். அதில் 2,697 மாணவர்களும், 3,168 மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.1 சதவீதமாக உள்ளது.
100 சதவீத தேர்ச்சி: இந்த ஆண்டில் 20 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டைவிட ஒரு பள்ளி கூடுதலாகும். இதில் 189 மாணவ மாணவியர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட 111 மாணவ, மாணவியர்கள் கூடுதலாகும். குறிப்பாக, 312 மாணவ, மாணவியர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்: கொடுங்கையூர், அரிநாராயணபுரம், எஸ்.என்.செட்டி தெரு, வால்டாக்ஸ் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, கொண்டித்தோப்பு, கீழ்ப்பாக்கம், டி.வி.புரம், வி.பி.கோயில் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, கே.பி. சாலை, கெனால் பேங்க் சாலை, ஜாபர்கான்பேட்டை,கோயம்பேடு, கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளிகள், ஆஞ்சநேய நகர் (தெலுங்கு) உயர்நிலைப் பள்ளி, மார்க்கெட் தெரு மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுப்புராயன் தெரு, ஆழ்வார்ப்பேட்டை ஆகிய இடங்களில் இயங்கிவரும் சென்னை மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.