சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திடீர் சோதனை நடத்தினார்.
இந்தச் சோதனையில் உணவுப் பொருள்கள் உள்பட காலாவதியான பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மெரீனா கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தரக்குறைவான, காலாவதியான பொருள்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன், அலுவலர்கள் சதாசிவம், முத்துக்கிருஷ்ணன் உள்பட வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் 10 குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவிடம் முதல் கண்ணகி சிலை வரை உள்ள சிறு உணவகங்கள், குளிர்பான விற்பனை கடைகள், மீன்கடைகள், தேநீர் கடைகள் என மொத்தம் 309 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காலாவதியான, தடை செய்யப்பட்ட குளிர்பானங்கள், புகையிலைப் பொருள்கள், தேயிலை, குடிநீர் என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.