சென்னை அசோக்நகரில் கள்ளச்சாவி மூலம் தங்கநகைத் திருடியதாக வீட்டு வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அசோக்நகர் 16 -ஆவது அவென்யுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பச்சை பெருமாள் (40). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார்.
பின்னர் இரவு வீடு திரும்பியவுடன், பீரோவில் வைத்துச் சென்ற தங்கநகையை பெருமாள் சரிபார்த்தார். அப்போது 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அசோக்நகர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில், பெருமாள் வீட்டில் வேலை செய்து வரும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா (40) கள்ளச்சாவி மூலம் வீட்டின் கதவையும், பீரோவையும் திறந்து, நகைகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து இந்திராவை போலீஸார் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.