சென்னை மதுரவாயல் அருகே லாரி-மொபெட் மோதிக் கொண்ட விபத்தில், தாய், மகள் இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ஹனிபா. இவர் மனைவி சைத்கான்(42). இத் தம்பதியின் மகள் பாத்திமா(21). ஹனிபா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
சைத்கான், ஆவடியில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்து வந்தார். பட்டப்படிப்பு படித்திருந்த பாத்திமா, பெண்கள் அழகு நிலையம் வைப்பதற்கு முயற்சித்து வந்தார்.
இந்நிலையில் அழகு நிலையம் வைக்க ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு பாத்திமா விண்ணப்பித்திருந்தார்.
இது தொடர்பாக ஒரு நபரை சந்திக்க மதுரவாயலுக்கு மொபெட்டில் பாத்திமா திங்கள்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார். மொபெட்டின் பின் இருக்கையில் சைத்கான் அமர்ந்திருந்தார்.
மதுரவாயல் அருகே வானகரம் வேம்புலியம்மன் கோயில் தெருவில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை பாத்திமா முந்த முயன்றாராம். அப்போது அந்த லாரி லேசாக மொபெட்டின் மீது இடித்ததாகத் தெரிகிறது.
இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த பாத்திமாவும், சைத்கானும் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதில் பாத்திமா சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சைத்கான் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.