அடுத்த மாத தொடக்கத்தில் சென்னைக்கு கல்குவாரி குடிநீர் விநியோகம்

சென்னை மாநகருக்கு வரும் ஜூன் முதல் வாரத்திலிருந்து கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

சென்னை மாநகருக்கு வரும் ஜூன் முதல் வாரத்திலிருந்து கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்காக சென்னைக்கு அருகே உள்ள கல்குவாரிகளிலிருந்து தினமும் 3 கோடி லிட்டர் வீதம் 100 நாள்களுக்கு தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் 6 லட்சத்து 73,339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 24,712 தெருக் குழாய்களும் உள்ளன. இதற்கு தேவையான தண்ணீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது.
பருவமழை சரியாக பெய்யாததால் சோழவரம் ஏரி 3 மாதத்துக்கு முன்பே வறண்டது. எஞ்சிய 3 ஏரிகளிலும் சேர்த்து 432 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனை வைத்துக்கொண்டு இந்த மாதம் முழுவதும் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர்த் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக சென்னையின் புறநகர் பகுதிகளான மாங்காட்டில் உள்ள 22 கல்குவாரிகள், திருநீர்மலையில் 3, பம்மலில் 3, நன்மங்கலத்தில் 3 கல்குவாரிகள் உள்பட 31 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த குவாரிகளின் தண்ணீர் குடிநீருக்கு உகந்ததா என அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தைச் சுற்றியுள்ள 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்குப் பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது.
கல்குவாரியில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரியில் உள்ள சிவில் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் சில குவாரிகளில் நீரூற்றுகள் இருப்பது தெரியவந்தது. இந்த கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை லாரிகளில் எடுத்துச்செல்வதா அல்லது குழாய்கள் மூலம் கொண்டுசெல்வதா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இறுதியாக குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப் பணி நிறைவடைந்த உடன் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியது:-சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதற்காக 22 கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவடையும்.
ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரிகளில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர் வீதம் 100 நாள்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை மாநகர குடிநீருக்கு விநியோகம் செய்யப்படும். இதுதவிர போரூர் ஏரியில் இருந்து 100 நாள்களுக்கு தினசரி 40 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் எடுப்பதற்காகவும் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியும் இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com